
கோகுலாஷ்டமிக்கு செய்யக்கூடிய மிக எளிய பாயசம். சற்று நேரத்தில் செய்துவிடக்கூடிய பாயசம். அம்மா இதை மாதம் இரு முறையாவது செய்துவிடுவாள். என் மாமியும் வீட்டிற்கு விருந்தாளி வந்தால் இந்த பாயசத்தை தான் செய்வார்கள். அனால் சீனி சேர்த்து செய்வார். மைக்ரோ வேவ் அவனில் செய்துவிடுவார். இங்கே நான் அடுப்பில் செய்யும் முறையை குறிப்பிட்டுள்ளேன்.
என்ன தேவை?
கெட்டி அவல் – 1/2 கப்
வெல்லம் – 1/4 கப் + 2 மேஜைக்கரண்டி (1/2 கப் வரை சேர்க்கலாம்)
பால் – 2 கப்
ஏலக்காய் – 1
முந்திரிப்பருப்பு – 5
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
வெல்லம் – 1/4 கப் + 2 மேஜைக்கரண்டி (1/2 கப் வரை சேர்க்கலாம்)
பால் – 2 கப்
ஏலக்காய் – 1
முந்திரிப்பருப்பு – 5
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படி செய்வது?
- வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் அவலை பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.
- பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி, வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.
- 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், ஒரு வடிகட்டியில் வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.
- ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும். வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.
உங்கள் கவனத்திற்கு
- அவல் நன்கு வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்கவேண்டும். வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது.
- இதே போல வெள்ளை சக்கரை சேர்த்தும் செய்யலாம்.
- பாலில் வேகவைக்காமல் தண்ணீரில் வேக வைத்து, பின் இறக்கும் முன் சிறிது பால் சேர்த்தும் செய்யலாம்.